Wednesday, 23 July 2014

மின்வாரிய முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டை, ஜூலை 22 -தமிழ்நாடு மின்வாரியத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்விபத்தை தடுக்கும் வகையில் தரமான மின் உபகரணங்களை- போதிய அளவில் வழங்க வேண்டும்; தொழிலாளர்களின் பணியிட மாறுதலில் வாரிய நடைமுறையைப் பின்பற்றவேண்டும்; தொழிலாளர் களை மிரட்டி வேலை வாங்கும் சர்வாதிகாரப் போக்கை நிர்வாகம் கைவிட வேண்டும்; மஸ்தூர் தொழிலாளர்களை கள உதவியாளர்களாகப் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் வி.அரசுமுகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன், திட்டச் செயலாளர் கு.செல்வராஜ், பொருளாளர் பி.ஆவுடைமுத்து மற்றும் கோட்ட நிர்வாகிகள் ஆர்.ஆறுமுகம், கே.கருப்பையா, எம்.கலியபெருமாள், வி.முத்து, ஆர்.பன்னீர்செல்வம், சி.சின்னத்தம்பி, டி.கணபதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

Friday, 11 July 2014

மின்வாரியம் : கணக்கீட்டு அதிகாரிகளிடம் பாரபட்சம் எஸ்.எஸ். சுப்பிரமணியன் - தீக்கதிர்

மின்வாரியத்தில் செயல்படும் மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் அமைப்பாக மட்டும் அல்லாமல் அதிகாரிகளின் அவல நிலைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்தான் வாரியத்தில் பணியாற்றும் பொறிஞர்களை ஸ்தாபனப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.இவைகளின் பின்னணியில் மின்வாரிய கணக்கீட்டுப் பிரிவில் பணிபுரிகின்ற உதவி கணக்கீட்டு அதிகாரிகள் தாங்கள் அதிகாரிகளாக பயன்படுத்தப்படவில்லை என்ற கவலையோடு மின் ஊழியர் மத்திய அமைப்பை நாடி உள்ளனர்.
அதன் அடிப்படையில் தான் வாரியத்தில் பணியாற்றும் உதவி கணக்கீட்டு அதிகாரிகளை அழைப்பது, குறைகளை பகிர்ந்து கொள்வது, நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பது என்ற அடிப்படையில் 6.7.2014 அன்று உதவி கணக்கீட்டு அதிகாரிகளின் கூட்டத்தை மின் ஊழியர் மத்திய அமைப்பு நடத்தி குறைகளையும், கோரிக்கைகளையும் அடையாளங்கண்டு வரிசைப்படுத்தி உள்ளது. 21 மின் வட்டங்களிலிருந்து 45 உதவி கணக்கீட்டு அதிகாரிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு மின் எரிப்பு கணக்கீடு, வாரியத்தின் வருவாயை உத்தரவாதப்படுத்தி உயர்த்துவது என்ற பணிகளில் ஈடுபட்டு இருக்கும் எங்களை பச்சை மையை பயன்படுத்தி கையெழுத்திடலாம் என்ற உரிமையை தந்து, எழுது பொருளை விநியோகம் செய்யும் அலுவலக உதவியாளரைப் போல பயன்படுத்துவதாக கண்ணீர் மல்க தங்களது குறைகளை முன் வைத்து, வாரியம் எங்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு போன்றவைகளை பரிசீலிப்பது போன்றது ஒரு புறமானாலும், கணக்கீட்டுப் பணியின் பல்வேறு பணிகளை மேற்பார்வையிட்டு ஒழுகுகின்ற வருவாயை தடுத்தாலே மின் வாரியத்தின் வருவாய் சிறிது கூடுதலாவதற்கு உதவும் என்ற ஆலோசனையை முன் வைத்தனர்.

Friday, 30 May 2014

தமிழகத்தில் ஜூன் முதல் தேதியிலிருந்து மின்வெட்டு முழுமையாக நீக்கப்படும் தேவைதொலை நோக்குத்திட்டம்

தமிழகத்தில் ஜூன் முதல் தேதியிலிருந்து மின்வெட்டு முழுமையாக நீக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஓரளவு விவசாயிகள், சிறு குறு தொழில் உரிமையாளர்கள், பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் அறிவிப்பாக இருக்கிறது. ஆனால் இந்த அறிவிப்பின் ஆயுள் எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. காரணம் ஜூன் மாதத்திலிருந்து காற்றாலை களின் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த காற்றாலைகள் முழுவதும் தனியார் கைகளில் இருந்து வருகிறது. இவர்களிடம் வாங்கியே மக்களுக்கு வினியோகிக்க வேண்டும். சரி காற்று இல்லாத காலங்களில் யாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது என்ற கேள்வி எழுகிறது.
இது ஒரு புறம் என்றால் மறுபுறம் தெரிந்தே மின் வயரில் கை வைப்பது போல், அரசு தனியாரிடம் மின்சாரம் வாங்கும் ஆபத்தான வேலையில் ஈடுபட்டு வருகிறது. அதாவது தமிழக மின் வினியோக நிறுவனத்தின் மின் உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.30 என்ற நிலையில் இருந்து வருகிறது. ஆனால் தனியாரிடம் ஒரு யூனிட் ரூ. 8.52 முதல் 13.89 என்ற அளவிற்கு 6 மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கப்படுகிறது. 2012ம் ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் தனியாருக்கு மின்சாரம் வாங்கிய வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது தமிழகத்தில் மின் வினியோக நிறுவனம் தன்னுடைய வருவாயில் 70 சதவிகிதத்தை தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப் பயன்படுத்தியுள்ளது.
அதுவும் அரசுக்கு தனியாரின் மின்சாரம் தேவையில்லை என்ற நிலையிருந்தாலும், குறிப்பிட்ட அளவிற்கான மின்சாரத்திற்கான தொகையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியே ஆக வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு சரத்து ஆகும்.அதுவும் தமிழகத்தில் 2011ம் ஆண்டு நிலவரப்படி மின் தேவை என்பது 12 ஆயிரம் மெகாவாட். அப்போது பற்றாக்குறை 4 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. அதன் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிற்கு மட்டுமே புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வருடத்திற்கு மின் தேவை என்பது 8 முதல் 10 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. காரணம் மக்கள் தொகை பெருக்கம், புதிய தொழில்கள், புதிய வீடுகளுக்கான மின் இணைப்பு என்ற பல்வேறு வகையில் தேவை அதிகரித்து வருகிறது. இதனை ஈடுகட்ட எந்தவித எதிர்காலத் திட்டமும் இல்லை என்பதுதான் உண்மை.
ஏற்கனவே மின் உற்பத்தியில் இருந்து வரும் எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில் உள்ளதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குத் திட்டத்துடன் தமிழக அரசும், மின்வாரியமும் மின் உற்பத்தி திட்டங்களை வகுத்திட வேண்டும். தேவையான நிதியினை ஒதுக்கி மின் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்.
THANKS To.theekkathir


Wednesday, 21 May 2014

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.உமாநாத் மறைவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியும், இந்திய இடதுசாரி இயக்கத்தின் இணையற்ற தலைவர்களில் ஒருவருமான தோழர்.
ஆர்.உமாநாத் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு தோழர் ஆர்.உமாநாத் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 21.5.2014 (புதன்) காலை 7.15 மணிக்கு இயற்கை எய்தினார்.

Tuesday, 8 April 2014

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 16வது மக்களவைத் தேர்தல், 2014 தேர்தல் அறிக்கை

பகுதி 1
முன்னுரை
இந்திய நாட்டு மக்கள் 16வது மக்களவைக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிகளுக்குச் செல்லவிருக்கிறார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் நாடாளுமன்ற ஜனநாயகம் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்ற நிலையில் தான் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியலில் நிலவும் பெரும் பணநாயகத்தின் வலிமையானது தொடர்ந்து ஜனநாயகத்தின் வலுவை சீர்குலைத்து வருகிறது. பொதுவாழ்விலும் அரசின் உயர்மட்டத்திலும் புரையோடிப் போயுள்ள கட்டுக்கடங்காத ஊழலானது ஜனநாயக அமைப்பின் உயிர்நிலைகளை சீழ்பிடிக்கச் செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பின்பற்றி வந்த புதிய தாராளவாதக் கொள்கைகள் நாடாளுமன்றத்தைத் தரமிழக்கச் செய்துள்ளதோடு பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள், அந்நிய நிதி நிறுவனங்கள், இவற்றிற்கு அடிபணிந்து நடக்கும் ஆளும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் கூட்டணியின் முடிவுகளுக்கு இணங்கவே அரசின் கொள்கைகள் தீர்மானிக்கப்படும் நிலைக்கும் அது தள்ளப்பட்டுள்ளது.

Sunday, 6 April 2014

மின்வாரியத்தில் பணியிட மாற்றம் தேர்தல் ஆணையத்திடம் சிபிஎம் புகார்

திருவாரூர், ஏப். 5 -
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருவாரூர் மின் திட்டக் கிளையில் பணியாற்றி வந்த கணக்கீட்டாளர்கள் இருவர், தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1-ம் தேதி பணியமர்த்தப்பட்ட ஒரு கைம்பெண்ணையும், அதே போல வேறொரு ஊழியரையும் 3.4.2014 அன்று துறையின் தேவை கருதி பணியிட மாற்றம் (டெப்டேஷன்) செய்துள்ளதாக மின்வாரிய நிர்வாகம் கூறுகிறது. இது போன்ற உத்தரவுகளை மேற்பார்வையாளர்தான் செய்ய வேண்டும். ஆனால் இயக்கம் மற்றும் பராமரிப்புத்துறையின் செயற்பொறியாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேபோன்று ஒரு ஊழியருக்கு ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சார்பில் கோரிக்கை வைத்தபோது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அவ்வாறு செய்ய முடியாது என இதே நிர்வாகம்தான் தெரிவித்துள்ளது.
முன்னுக்குப் பின் முரணாக தமிழ்நாடு மின்சாரவாரிய திருவாரூர் மின்திட்டக்கிளையின் செயற்பொறியாளர் செயல்படுவதாக மின் ஊழியர் அமைப்பின் தலைவர்கள் குறைகூறுகின்றனர்.இந்த குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்ட போது நிர்வாகத்தின் வசதிக்காக தற்காலிகமாகத்தான் இந்த டெப்டேஷனை செய்துள்ளோம் என்று கூறினார்.
இது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறுவதாகாதா? என்று கேட்டபோது அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லை. இதுகுறித்த தகவல் அறிந்த சிபிஎம் மாவட்ட செயலாளர் ஐ.வி.நாகராஜன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சி.நடராசனின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றார். அவர் இது குறித்து விசாரிப்பதாக கூறியுள்ளார்.
எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த போக்கு சரியானதல்ல என்று சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.